Sunday, December 17, 2017

நான் பேசிய அந்த ஆடியோ உண்மையானது தான்- புளியங்குடி சே செய்யது அலி

வாகன பயணத்தில் தொலைபேசியில் என் நன்பரோடு பேசிய உரையாடலை, என்னோடு உடன் பயணித்து பக்கத்தில் இருந்து கொண்டே அதனை பதிவு  (voice record) செய்த ஒரு நல்ல மனிதர் மூலமாக அந்த ஆடியோ Ameer Shaid என்ற சகோதரர் மூலமாக முகநூலில் பகிரப்பட்டுள்ளது . 

http://fazlulilahi.blogspot.ae/2017/12/blog-post.html 

அந்த ஆடியோ உண்மையானது தான். அது நான் பேசியது தான். ஆரம்பத்தில் இது "சைனா மொபைல்" மூலமாக செய்யப்படும் டெக்னாலஜி பதிவு என்று தான் நினைத்தேன். என்னிடம் கேட்ட சகோதரர்களிடம் கூட,அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் பேசவில்லை என மறுத்து வந்தேன். ஆனால் அதன் பிறகு இன்றைய தினம் இரவில் எனது வாட்ஸ்அப் க்கு அனுப்பப்பட்ட 22 நிமிட முழு ஆடியோ பதிவையும் கேட்ட பிறகு  தான் உண்மையில் நாம் பேசியது தான் என நான் நம்பினேன் . 


நாம் பேசிய வார்த்தைகளை இல்லை என்று மறுத்து அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அல்லாஹ்விடம் பாவியாக நிற்பதை விட, செய்த தவறை ஒத்துக் கொண்டு அல்லாஹ்விடமும் சம்பந்தப்பட்ட நபர்களிடமும் மன்னிப்புக் கேட்டு விடுவது தான் ஒரு இறை நம்பிக்கை கொண்ட முஸ்லிமுடைய பண்பாக இருக்கும். 


“அவர்கள் மானக்கேடான காரியத்தை செய்துவிட்டால் அல்லது தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டால் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து தம் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வைத்தவிர வேறு யார்தான் அவர்களின் பாவங்களை மன்னிக்க முடியும்? அறிந்துகொண்டே தாம் செய்தவற்றில் அவர்கள் பிடிவாதமாக நிலைத்திருக்க மாட்டார்கள்.” (திருக்குர்ஆன் 3: 135)


என்ற இறை வசனத்திற்கு ஏற்ப பிடிவாதம் கொள்ளாமல் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்பது தான் சிறந்த பன்பாக இருக்க முடியும். குறிப்பாக அந்த உரையாடலில் ஒருமையில் வார்த்தை பிரயோகம் பயன்படுத்தியதற்காக மரியாதைக்குரிய சகோதரர்கள் தடா ரஹீம் அவர்கள் ,சகோதரர் S.M.பாக்கர் அவர்கள் உள்ளிட்டோர்களிடம் இந்த முகநூல் வாயிலாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.அவதூறான செய்திகளை பதிவு செய்திருந்தால் அதற்காகவும் அதில் தொடர்புடைய அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் . 


அதேபோல் சிறைவாசிகள் தொடர்பாக ஒட்டுமொத்தமாக அனைத்து சிறைவாசிகளும் சுகபோகமாக இருக்கிறார்கள் என்று நான் அதில் பேசவில்லை. நூற்றுக்கணக்கான சிறை  மக்களில் உள்ளே இருப்பவர்கள் தவிர


வெளியே வந்த ஒரு சிலரை பற்றி மட்டுமே அதிலும் குறிப்பாக நானும் எதிர்முனையில் என்னோடு உரையாடிய நண்பரும் அறிந்த ஒரு சிலரை பற்றி மட்டுமே பேசினோம் . சிறை சகோதரர்கள் மீது அவதூறுகள் செய்ய வேண்டிய தேவை நிச்சயமாக எனக்கு இல்லை. 


நான் பொதுவாழ்க்கைக்கு வந்த நான்காவது ஆண்டிலிருந்து அதாவது 1998லிருந்து, சிறை வாழ்க்கை அனுபவித்து சிலுவையில் அறையப்பட்ட சிறை சகோதரர்கள் உள்ளிட்ட  பல சமுதாய போராளிகள் அனைவருக்குமாக எனது உழைப்பை , எனது பங்களிப்பை அளித்து இருக்கிறேனே தவிர அவர்களை பற்றி எந்த ஒரு அவதூறையும் இதுவரையில் நான் செய்யவில்லை. உளத்தூய்மையுடன் நான் செய்த பல உதவிகளை இன்று பகிரங்க படுத்த வேண்டிய துர்பாக்கிய நிலை. 


அந்த மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட என்னை பற்றி சிறை மக்கள் உள்ளிட்ட என் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் நன்றாக தெரியும்.


சிறைவாசிகள் பற்றி சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் மிகப்பெரிய ஆளுமைகளே  தயங்கிய காலத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பே.....

2000 , 2002, 2004, 2005, 2006 ஆகிய கால கட்டத்திலேயே அந்த மக்களின் துயர் துடைக்க களமாடியவன் . இது வெளிப்படையான, பகிரங்கமான உண்மை.!

சிறைவாசிகள் விடுதலை என்ற ஒற்றை கோரிக்கைக்காக பல மேடைகளில் முழங்கியவன் , அதற்காக பல்வேறு இழப்புகளை ஏற்றுக் கொண்டவன்.எனது  அரசியல் எதிர்காலத்தை இழந்தவன். அந்த மேடைகளிலேயே கண்டிக்கப்பட்டவன் பின்பு தண்டிக்கப்பட்டவன்.

சிறைவாசிகள் விடுதலைக்காக பல வகையான போராட்டங்கள்,பொதுக்கூட்டங்கள் நடத்தியவன் சிறைவாசிகள் விடுதலைக்கு நான் பணியாற்றிய தமுமுக பல்வேறு மாவட்டங்களில் நடத்திய மாநாட்டிற்காக மக்களை திரட்டியவன் . வழக்கு நிதிக்ககாக உதவியவன், அவர்களின் குடும்பங்களின் துயர் துடைக்கும் பணிகளில் முழுமையாக என்னை அர்ப்பணித்தவன் .

இன்றைக்கு சிறை மக்கள் பற்றி கவலைப்பட ஒரு போராளி கூட்டம் தயாராக இருக்கிறது. ஆனால் அன்றைய ஆரம்ப காலகட்டத்தில்,  அன்றைய இக்கட்டான காலகட்டத்தில் நான் 
சமூக தொண்டாற்றி இருக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.!!

இதனையெல்லாம் வெளியே சொல்லி என்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலையிலும் நான் இல்லை. அல்லாஹ் போதுமானவன் .! 

“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
                                                   ( அல் குர்ஆன் 9:51) 
என்ற இறை வாக்கில் நம்பிக்கை உள்ளவன். அல்ஹம்துலில்லாஹ்.! 

சிறைவாசிகள் என் கொள்கை உறவுகள்.அந்த அடிப்படையில் எனது கடந்த கால பொது வாழ்வின் செயல்பாடுகளை  ஆய்வு செய்ய வேண்டும் என அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சமூக அமைப்புகளில் பணியாற்றுவதையே விட்டு வெளியேறி, வெறுத்து ஒதுங்கி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்லாமிய அழைப்பு பணி மட்டும் செய்து கொண்டிருந்த நான் மஜக வில் சேர்ந்து பணியாற்ற வேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்லை.

இந்நிலையில் "சிறைவாசிகள் விடுதலை பெற அனைத்து முயற்சிகளும் நாங்கள் எடுத்து வருகிறோம் எங்களோடு சேர்ந்து பணியாற்ற வாருங்கள்" என  கோவை மஜக சகோதரர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள். அவர்களது அந்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் மஜக வில் இணைந்தேன் மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை. இதை  கோவை மாவட்ட மக்களிடம் யாரும் விசாரித்து கொள்ளலாம்.! சிறை சகோதரர்கள் மீதான 20 ஆண்டுகால பாசம் தான் அதற்கு காரணம்.!!!

மற்றபடி அந்த உரையாடலில் பாவமான பேச்சுக்களை பேசியதும்,  அவதூறான தகவல்களை பரிமாறிக் கொண்டதும் மிகவும் தவறான காரியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில் இந்த விசயத்தில் மற்றவர்களுக்கும் முஸ்லிமுக்கும் உள்ள வேறுபாடு, முஸ்லிம் தான் செய்த பாவத்தில் நிலைத்திருக்க மாட்டான், தன் பாவத்தை நியாயப்படுத்த மாட்டான். பாவம் புரிந்துவிட்டால் முன்பைவிட அதிகமாக இறைவனை நினைவுகூருவான், அவனிடம் பாவமன்னிப்புக் கோருவான்.அதன்படி நானும் இறைவனிடமே மீளுகிறேன் .

மனிதர்களில் புனிதர்கள் என்று யாரும் இங்கு இல்லை. யாரும் தன்னை பரிசுத்தவான் என்று கூறிக்கொள்ள முடியாது. பரிசுத்தமாக வாழ விரும்புகிறேன் என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம். அனைவரின் அந்தரங்கமும் முடைநாற்றம் அடிக்கக்கூடியதுதான். அதன்படி ஆடியோ தொடர்பாக எனது கருத்தை  நம்பினாலும் நம்பாவிட்டாலும் எனக்கு பரவாயில்லை. வல்லமை மிக்க இறைவன் முன்னிலையில் இதற்கான கணக்கை நான் சமர்பிக்க வேண்டும். அந்த நாளுக்காகவே ஆடியோ உரையாடலை பகிரங்கமாக ஒத்துக் கொள்ளுகிறேன். அந்த மறுமை நாளில் சந்திப்போம்.! இன்ஷா அல்லாஹ்.!!

 புளியங்குடி சே செய்யது அலி .

No comments: